Monday, December 20, 2010

ஆண்டிமுத்து ராசா வருகிறார் பராக்.. பராக்! - மக்களிடம் அழைத்து வருகிறது கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய நாட்டில் நடைபெறும் மிகப் பயங்கரமான ஊழல்கள் உலக நாடுகளை எல்லாம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. குறிப்பாக சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்து வரும் இந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கிளம்பிக் கொண்டிருக்கின்றன.

காமன் வெல்த் ஊழல், கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடுமபத்திற்கு வீடு மனை ஒதுக்கியதில் ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் ஊழல், கனிமவளங்களில் ஊழல் என்று மிகப்பெரிய ஊழல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்த ஊழல்கள் எல்லாம் இந்திய மக்களை வெறுப்படைய செய்துள்ளது. இணையத்தில் நடந்த ஒரு ஓட்டெடுப்பில் 'நான் இந்தியன் என்று சொல்லிக் கொள்ள அவனமானமாக உள்ளது ' என்று 55 சதவீதத்திற்கும் மேலானவர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த ஊழல்கள் எல்லாம் அரசியல்வாதிகள் மீது கோபத்தையும், இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுல்லாத ஒரு நிலையையும் விதைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இந்திய வரலாற்றில் நடந்துள்ள ஊழல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மீது விசாரனைகள் நடந்த போதும் அவை நிரூபிக்கப்பட்டதில்லை. குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டதும் இல்லை என்பது தான் நிலைமையாக இருந்து வந்திருக்கிறது.

சமீபத்தில் இந்தியாவை உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1,76,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தி.மு.க அமைச்சர் ஆண்டிமுத்து ராசா என்ற ஆ.ராசா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் வரை இந்த ஊழலில் விசாரிக்கப்பட நேரலாம் என்ற நிலை எழுந்துள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற ஓட்டு ஜனநாயகத்தில் பங்கெடுத்து செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிக்கொண்டு வந்ததில் முக்கிய பங்குண்டு. தற்போது எதிரும் புதிருமாக உள்ள பாரதீய ஜனதா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போது நடைபெற்ற நாடாளூமன்ற கூட்டத் தொடரை நடத்த விடாமல் புறக்கணித்தன. இந்திய வரலாற்றில் முதன் முறையாக நாடாளுமன்றம் முழுமையாக முடக்கப்பட்டது இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை நாட்டின் மூலை முடுக்கில் உள்ள மக்களிடம் எல்லாம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அதில் ஒரு காட்சி தான் இங்குள்ள புகைப்படத்தில் இருப்பது. ஆண்டிமுத்து ராசா வேடத்தில் உள்ள ஒரு நபர் கையில் பட்டாக்கத்திகளுடன் நகரை வலம் வருவதும், இந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய அட்டைகளை கையில் ஏந்திக் கொண்டு வருவதும் மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது

No comments:

Post a Comment